

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவலின் வேகம் குறைவில்லை.
தமிழத்தில் நேற்று புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,373 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்ட போதும், அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக ஆஸ்பத்திரி அதிகாரி தெரிவித்தார்.
அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.