

தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் இன்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தீவிர போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளையும், அ.தி.மு.க. நடத்திய ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தையும் கமல் விமர்சனம் செய்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி வரலாறு தெரியாத கமல் வாய்க்கு வந்த படி பேசுவதாகவும், போராட்டம் நடத்த துணிவின்றி சமூக வலைத்தளத்தில் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
‘அரசியல்வாதி என்று ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கமலுக்கு பக்குவம் கிடையாது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் சென்றதை சரித்திர சாதனையாக பேசிக்கொண்டிருக்கிறார். கமலுக்கு நடிகருக்கான பண்பு மட்டும்தான் உள்ளது, அரசியல்வாதிக்கான பண்பு இல்லை.