

கோவை:
கோவைப்புதூர் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (59) மற்றும் சிவகுமார் (37). இவர்கள் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கையில் இருந்த கம்பி எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் அருகே சென்ற மின்சார கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் தூக்கி வீசப்பட்டனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பலத்த காயமடைந்த சிவகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.