

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் மீது சி.பி.ஐ. வழக்குகள் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
ஆனால், அவர் ஆஜராகவில்லை. அந்த சம்மனை எதிர்த்து ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, மத்திய அரசு கடந்த மாதம் 18ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்படவில்லை.
தன்னை தேடப்படும் நபராக அறிவித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘மல்லையா விவகாரத்தில் மத்திய அரசுக்கு கிடைத்த முன் அனுபவத்தினால், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு வக்கீல் கூறினார். இதன்பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி, தேடப்படும் நபராக அறிவித்த உத்தரவு நகலை கார்த்தி சிதம்பரம் தரப்பு வக்கீலுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நகலை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.