

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று வெளியிட்டார். அந்த வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்துவதுபோல் உள்ளது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று வீடியோவை வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வீடியோ வெளியிட்டது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.