ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை- நாராயணசாமி

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய ராகுல்காந்தி ஒப்புக்கொண்டாலும் எனக்கு உடன்பாடு இல்லை என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். #RajivGandhiCase #Narayanasamy
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை- நாராயணசாமி
Published on

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கடந்த 4 நாட்களாக மாற்று திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 ஆண்டுகால மோடியின் ஆட்சியால் நாடு முன்னேறவில்லை. நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி பணத்தை மாற்றினால் கருப்பு பணத்தை ஒழித்துவிடலாம் என்றார். ஆனால் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. புதிதாக நோட்டு அச்சடிக்கப்பட்டதால் ரூ.20 ஆயிரம் கோடி செலவானதுதான் மிச்சம். ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

நானும் ஊழல் செய்யமாட்டேன். வேறு யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என வீராப்பு பேசி மோடி சவால் விட்டார். ஆனால் இப்போது ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது பூதாகரமாக கிளம்பி உள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லாமல் திணறி கொண்டிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை மன்னித்து விடுதலை செய்ய தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.

எனினும் தலைவர் ராகுல்காந்தி கூறியதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெயருக்குதான் அ.தி.மு.க. அரசு. ஆனால் அரசை இயக்கி வருபவர் பிரதமர் மோடி தான். பாரதிய ஜனதாவின் டீம்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை மோடி ஆட்டிப்படைக்க அதன்படி இங்குள்ள ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Rajivgandhi #RajivGandhiCase #PuducherryCM #Narayanasamy #PMModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com