கொரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்: நாராயணசாமி எச்சரிக்கை

கொரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on

புதுச்சேரி :

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பணிக்காக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கலந்து பேசி ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களை நியமிக்க உள்ளேன். இதுதொடர்பான கோப்பு ஏற்கனவே தயாராக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து டாக்டர்களை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய தேவையான உபகரணங்கள் வாங்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.கிட்டுகள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பரிசோதனைகள் செய்தால் தான் கொரோனா நோயாளிகளை கண்டறிய முடியும். எனவே முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்க உள்ளோம். புதுவையில் ஒரு சில கடைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அந்த கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வேகமாக பரவும் காலம். இதனை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிரதமரின் உரைக்கு பின்னர் சில கடுமையான கட்டுப்பாடுகளை அரசு எடுக்கும் நிலை ஏற்படும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்களின் உயிர் மிக முக்கியம். அதை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் உரிமையை காக்க மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com