

சென்னை:
ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஜி.எஸ்.டி.யால் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதத்தில் இருந்து உயருகிறது. 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் கியாஸ் சிலிண்டர் வாங்க ரூ.574.50 செலுத்த வேண்டும்.
கடந்த மாதம் சென்னையில் சமையல் கியாஸ் விலை ரூ.560 ஆக இருந்தது. தற்போது ரூ.14.50 உயர்த்தப்பட்டுள்ளது.
கியாசுக்கு செலுத்தப்படும் ரூ.574.50-ல் வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.108.42 கிடைக்கும். இது வழக்கம் போல் வங்கியில் செலுத்தப்படும்.
இதில் வினியோகஸ் தருக்கான கமிஷன் ரூ.47.63 ஆகவும், ஜி.எஸ்.டி.க்கு ரூ.24.96 வும், மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.12.48 ஆகவும், போக்குவரத்து கட்டணமாக ரூ.19.96 ஆகவும் சென்னையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத ஜி.எஸ்.டி. வினியோக கமிஷன் தான் வாடிக்கையாளர்களை பாதிக்கிறது.
ஜி.எஸ்.டி.யால் கியாஸ் விலை உயர்ந்தது தொடர்பாக இல்லத்தரசி ஒருவர் கூறும் போது, “ஜி.எஸ்.டி.யால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சுமையாகும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த விலை உயர்வை அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும்“ என்றார்.
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் உயர்வை போல வர்த்தகத்துக்கான சமையல் கியாசும் உயர்ந்துள்ளது. வர்த்தகத்துக்கான சிலிண்டர் விலை தற்போது ரூ.1,103 ஆக உள்ளது.