மதுக்கடை உரிமத்தை ஏலம் விட வேண்டும்- கிரண்பேடி வலியுறுத்தல்

மதுக்கடை உரிமத்தை ஏலம் விட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி
கவர்னர் கிரண்பேடி
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில வளர்ச்சி தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாகவும், மாநில வளர்ச்சி தொடர்பான விபரங்களை குறிப்பிட்டு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் அலுவலகம் கடந்த 4 ஆண்டாக மதுக் கடைக்கான உரிமத்தை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் அரசின் கருவூலத்திற்கு வருவாயை கணிசமாக உயர்த்தலாம். கலால் துறையிலும் வெளிப்படையான மேலாண்மை உருவாகும்.

தனியார் நிறுவனங்களின் சொத்துக்களுக்கு வரி விதிப்பு, கேபிள் டி.வி. மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பை முறைப்படுத்துவது, மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்ளிட்ட பல நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தினோம். அரசு சொத்துக்களை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் கோரினோம். மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் விருப்பத்திற்காகவே காத்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில், புதுவை அரசு இத்திட்டங்களை செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை அரசு பார்க்க வேண்டும். இந்த ஆதாரங்களின் அடிப்படையை பார்ப்பது அவசியம்.

மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. இதுபோன்ற நிலையை புரிந்துகொள்ளவும், செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் இப்பணிகளுக்கு வழங்கும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com