சிறிய தவறுக்கு பெரிய தண்டனையா?- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேட்டி

சிறிய தவறுக்கு பெரிய தண்டனையா? என்றும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது மன வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
Published on

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணி கண்டன். இவர் நேற்று முன்தினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாகவே மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

என் குடும்பம் ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் இருந்து வருகிறது. தந்தை 1972 முதல் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். நானும் டாக்டராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன்.

கட்சிக்கு உண்மையாக உழைத்து இருக்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கும் பக்கப்பலமாக இருந்து வருகிறேன்.

பரமக்குடி இடைத்தேர்தலில் நான் கடுமையாக உழைத்தேன். அதனால்தான் அ.தி.மு.க. ஜெயிக்க முடிந்தது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் பதவியில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு நான் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்துக்கு அதிக வருமானம் வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்திவரும் 2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினேன்.

இந்த சிறிய தவறுக்கு பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை பறிப்பதற்கு முன்பு என்னிடம் விளக்கம் கேட்டு இருக்கலாம். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்துவிட்டேன். உண்மையை வெளியில் பேசியதால் தண்டிக்கப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.

என் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தமிழக அமைச்சர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அனைவருமே குழந்தையை போன்றவர்கள். சிறிது தவறு செய்தால் எங்களை வழி நடத்தி செல்பவர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஆனால் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது மிக பெரிய தண்டனை ஆகும். ஆனாலும் தொடர்ந்து உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சிக்காக உழைப்பேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com