ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்புக்கு மாறும் 5 மாவட்டங்கள்

அரியலூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுமே ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்புக்கு மாறுகின்றன.
சிவப்பு மண்டலம்
சிவப்பு மண்டலம்
Published on

சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் ஏற்கனவே சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய சில மாவட்டங்கள் மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த 676 நபர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மொத்தம் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஏற்கனவே ஆரஞ்சு மண்டலத்தில இருந்த அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது தென்காசி மாவட்டத்தில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 46 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த தென்காசி மாவட்டமும் சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிக பாதிப்பு காரணமாக கோவை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கோவை பகுதிக்கு 28 பேர் வந்துள்ளார்கள். அவர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோயம்பேட்டில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு 33 டிரைவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 டிரைவர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகிறார்கள்.

கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் மூலமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பு 135 ஆக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒரே நாளில் 122 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பிய 145-க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் தற்போது மீண்டும் சிவப்பு மண்டலமாகும் நிலை உருவாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். போடியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ள நிலையில் இன்று உத்தமபாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை அரியலூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் மொத்தம் 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்த 5 மாவட்டங்களுமே ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்புக்கு மாறுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com