தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு டி.டி.வி. தினகரன் முயற்சித்தார் என புகார் எழுந்தது. இதில் தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர், சுகேஷ் சந்திரசேகர்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரொக்கபணம் ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டன.
அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தாலும், டெல்லி ஐகோர்ட்டாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இப்போது அவர் மறுபடியும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.