25 போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

உடல்நலக்குறைவு, விபத்தில் இறந்த 25 போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் நிதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தரமணி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த ப.பிரபு, பாதுகாப்பு சென்னை போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜோ.ஆரோக்கியநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ரா.பார்த்தசாரதி, காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலாஜி மற்றும் செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ந.ரமேஷ்பாபு ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த கோவிந்தசாமி சாலை விபத்தில் இறந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவர்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் இறந்த 25 போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் 25 பேரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com