

நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல் நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றி சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததாகவும், அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.