பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.
கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்
Published on

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது.

இந்த கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள 3-வது மாடியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

அவரை சபை மரபுபடி சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிப்பார்கள்.

சபாநாயகர் இருக்கைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி அமர்ந்த பிறகு மற்ற உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்வார்கள். கவர்னர் இருக்கை அருகே சபாநாயகர் அமர்வார். சரியாக 10 மணி ஆனதும் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது அவையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முடிந்ததும் ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒன்றரை மணிநேரம் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் இடம் பெறும்.

பின்னர் அந்த உரையை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். அதன் பின்னர் நாட்டுப்பண் பாடப்படும். அப்போது அவை உறுப்பினர் அனைவரும் எழுந்து நிற்பார்கள். நாட்டுப்பண் முடிந்ததும் அதோடு அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

மரபுபடி கவர்னர் எப்படி அழைத்து வரப்பட்டரோ, அதே அணி வகுப்பின்படி அவர் வழியனுப்பி வைக்கப்படுவார். சட்டசபையை விட்டு கவர்னர் வெளியே செல்லும்வரை அவை உறுப்பினர்கள் நிற்பார்கள்.

இந்த கூட்டத்தொடர் அனேகமாக 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.

தி.மு.க. ஆட்சியில் இதுவரை செய்துள்ள சாதனைகள், திட்டங்களை விளக்கி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இதேபோல் எதிர்க்கட்சியினர் இப்போதைய ஆட்சியில் உள்ள குறைபாடுகளை எடுத்து பேசுவார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முக்கியமான வாக்குறுதிகளை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்விக்கணை தொடுப்பார்கள்.

இதனால் சட்டசபையில் விவாதம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இறுதிநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசுவார்.

இதையும் படியுங்கள்...2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் தகவல்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com