மின்வாரியத்தில் தலைவிரித்தாடும் ஊழல் - ராமதாஸ் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது.மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர்.
மின்வாரியத்தில் தலைவிரித்தாடும் ஊழல் - ராமதாஸ் குற்றச்சாட்டு
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ 18,400 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தும் ரூ 10 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளது. 22-ம் ஆண்டு ரூ 36500 கோடியும், 23-ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் 34 ஆயிரம் கோடி கிடைத்தும் 3420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு முறையும் மின்கட்டணமாக ரூ 2400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் உள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம் குறித்த வடிவம், தேதி குறித்த கூட்டுப்பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் கூடி தேதி முறைப்படி அறிவிக்கப்படும்.

திண்டிவனம்-நகரி ரெயில்பாதை பணிகளுக்கு கணிசமான நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-திருவண்ணாமலை ரெயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். கிழக்கு கடற்கரை பாதை திட்டத்திற்கு ரூ 205 கோடி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை கடந்துவிட்டது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. அரசுத்துறையின் தற்காலிகப்பணிகளுக்கு ரூ 20 ஆயிரம் நிர்ணயிக்கப்படவேண்டும். அமைப்புச்சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும் ரூ. 600 வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 200 வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும்.

பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்கியும். ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதும் சுரண்டலே ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com