

மதுரை:
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே கொண்டு வந்ததுதான். இந்த சட்டம் குறித்து மக்களுக்கான அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாய்-தந்தையின் பிறப்பிடம் குறித்த கேள்வியை தவிர்க்க வேண்டும்.
தமிழக அமைச்சர்கள் சொந்த பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் பேசுகிறார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமையும் வகையில் எங்களது தேர்தல் கூட்டணி இருக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
பெண் சிசுக்கொலையை தடுக்க ஜெயலலிதா ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சியில் இருந்தால்தான் ஆளுமை என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். வருகிற 2021 -ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.