

நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜூலை 31 ஆம் தேதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் வரை தொற்று எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கொரோனா வைரசை தடுக்கும் பணியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றுவதில்லை. மருத்துவமனைகளின் நிலைமை வருந்தத்தக்க வகையில் உள்ளது. இறந்துபோனர்களின் உடல்களை கையாள்வதில் உரிய கவனிப்பையும் அக்கறையையும் கொடுப்பதில்லை.
டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் லாபி மற்றும் காத்திருப்பு பகுதியில் உடல்கள் இருந்ததாகவும், வார்டுக்குள் பெரும்பாலான படுக்கைகள் காலியாக இருந்ததாகவும் தகவல் வந்துள்ளது.