மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
எழிலகத்தில் உள்ள விசாரணை கமிஷன் அலுவலகத்தில் இதுவரை தி.மு.க. மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, பொறுப்பு டீன் நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவற்றை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
தீபாவின் கணவர் மாதவன் இன்று விசாரணைக்காக எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார்.
இதைத்தொடர்ந்து ஜெ.தீபா வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோர் நாளை ஆஜராகவும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் தனது முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்து போட்டுள்ளார்.