

சீனா - பாகிஸ்தான் இணைந்து பொருளாதார வழிபாதை திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சீனாவில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கும் பணியை இரு நாடுகளும் மும்முரப்படுத்தி வருகின்றன. மேற்கண்ட இந்த சாலை அமைக்கும் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதற்கான கூட்டத்தையும் புறக்கணித்தது.
இந்நிலையில், இந்தியாவின் புறக்கணிப்பும், கண்டனமும் சீனாவுக்கு சீற்றத்தை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன அதிபர் க்சி ஜின் பிங், ’ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடுவது சரியல்ல’ என இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த பொருளாதார வழிபாதை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் .” பொருளாதார வழிபாதை என்பது பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பயன்படும் வண்ணம் அமைக்கப்பட இருக்கிறது. கண்டிப்பாக இது அரசியலாக்கப்பட கூடாது. எதிர்கால சந்ததியரின் நலனுக்காக இரு நாடுகளுக்கிடையே உள்ள முரன்பாடுகளை தூதரகத்தின் மூலமாக மாற்ற வேண்டும்” என கூறினார்.