தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது

தஞ்சை பெரியகோவிலுக்கு படையெடுத்து வந்த பொதுமக்கள் கூட்டம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெகுவாக குறைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலா தலமாக தஞ்சாவூர் விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய தஞ்சை பெரியகோவிலை காண உலகெங்கிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந்தேதி பெரியகோவில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பெரியகோவிலில் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி செய்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகளில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு வருவதை குறைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த கொரோனா வைரசுக்கு பயந்து கோவிலுக்கு வருவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நாள் ஒன்றுக்கு ஒருலட்சத்திற்கும் மேல் தஞ்சை பெரியகோவிலுக்கு படையெடுத்து வந்த பொதுமக்கள் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் பெரிய கோவிலில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளிடம் இருந்து கொரேனா வைரஸ் பரவாமல் இருக்க அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முக கவசம் அணிந்து வருவதை கட்டாயப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com