ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி - இமாசல் அரசு அறிவிப்பு

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடத்தி கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என இமாசலப்பிரதேச மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார்.
ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி - இமாசல் அரசு அறிவிப்பு
Published on

சிம்லா:

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம், இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என வெளியுறவு துறை தெரிவித்தது. இதில், இமாசலப்பிரதேசத்தை சேர்ந்த அமன்குமார், சந்தீப்சிங் ரானா, இந்தர்ஜித் மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடத்தி கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என இமாசலப்பிரதேச மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஈராக்கில் பயங்கரவாதிகள் நடந்து கொண்ட விதம் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது. இதில் கொல்லப்பட்ட காங்க்ரா மற்றும் மண்டி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். முதல் மந்திரி தாக்கூர் சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்தார் என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com