‘டிக்டாக்’ செயலியை ஒழிக்க வேண்டும்- நாராயணசாமி

‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும். வெளிநாட்டு மோகம் நம் நாட்டிற்கு வருவதால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on

புதுவை மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் இணைந்து அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு மனநல கல்வி மேம்பாட்டு பயிற்சியை 2 நாட்கள் நடத்துகிறது.

இதன் தொடக்கவிழா கல்வித்துறை வளாகத்தில் இன்று நடந்தது. மகளிர் ஆணைய தலைவி ராணி ராஜன்பாபு வரவேற்றார். பயிற்சி முகாமை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இந்தியாவில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

கடந்த காலத்தில் கிராம மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். நகர பகுதிக்கு வரும்போது வாழ்க்கை முறை மாறிவிட்டது. சம்பாதிக்கும் போராட்டத்தால் மன அழுத்தம் அதிகரித்து விட்டது. ஆசிரியர்கள் குடும்பத்தில் மனைவி சண்டை போட்டால் மாணவர் அடி வாங்குவார்.

புதுவையில் தரம் உயர்ந்த கல்வியை நாம் வழங்குகிறோம். இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பே காரணம். அரசு பள்ளியில் பிளஸ்-2, 10-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளோம்.

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரியில் 50 சதவீத இடஒதுக்கீடு தருகிறோம். கல்விக்கு பட்ஜெட்டில் 8 சதவீத நிதி ஒதுக்குகிறோம். அரசு ஊழியர்களில் 3-ல் ஒரு பங்கு ஆசிரியர்கள்தான்.

மக்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்கிறோம். கவர்னர் பணம் வழங்க வேண்டும் என்கிறார். கிராமத்தில் கணவர் சாராயக்கடைக்கு எடுத்துச்செல்வதாக சண்டை நடக்கிறது. அரிசி வழங்க நாங்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளோம்.

மனஅழுத்தம் உள்ளவர்களிடம் தொடர்ந்து பேசினால் மனம் மாறும். அதற்காக நமக்கு சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிம்மதி இருக்காது. குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள், மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். பல குடும்பங்கள் கணவரின் முரட்டுத்தனத்தால் மனைவியின் விடாப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் உலக நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். சமூகவலைதளம் பல குடும்பங்களை சீரழித்துள்ளது.

இவற்றை எதிர்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பது குறித்து பயிற்சி தரப்படுகிறது. இதனை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மகளிர் ஆணையம் குடும்ப பிரச்சினை வந்தால் பிரிக்கும் வேலையை பார்க்கக்கூடாது, சேர்த்து வைக்க வேண்டும். கிராம மக்களுக்கும் மகளிர் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் அடிமையாக இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com