சென்னையில் சொத்துவரி கட்டாவிட்டால் 2 சதவீதம் தனி வட்டி - சட்டசபையில் மசோதா தாக்கல்

சொத்துவரி கட்டாவிட்டால் 2 சதவீதம் தனி வட்டி என சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன் வடிவை தாக்கல் செய்தார். #ChennaiPropertyTax #TNAssembly
சென்னையில் சொத்துவரி கட்டாவிட்டால் 2 சதவீதம் தனி வட்டி - சட்டசபையில் மசோதா தாக்கல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கு இதுவரை வழிவகை இல்லை. மேலும் உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு வட்டி விதிப்பதற்கும் தற்போது வழிவகை இல்லை.

4-வது மாநில நிதி ஆணையமானது சொத்து வரியை காலம் தாழ்த்தாமல் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும், காலம் தாழ்த்தி வரி செலுத்துபவர்களுக்கு வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது.

இதன்படி சொத்துவரியை உரிய தேதிக்கு பிறகும் செலுத்தாமல் இருந்தால் அந்த தொகையுடன் கூடுதலாக 2 சதவீதத்திற்கு மிகையல்லாத விதத்தில் வகுத்துரைத்து தனி வட்டி செலுத்த வேண்டும்.

சொத்துவரி செலுத்துபவர்கள் அரையாண்டு தொடக்க தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் அவருக்கு சொத்துவரி செலுத்தும் தொகைக்கு 5 சதவீதம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை சொத்துவரியை எப்போது வேண்டுமானாலும், எத்தனை ஆண்டுகள் கழித்தும் செலுத்தும் நிலை இருக்கிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு சொத்துவரியை சரியான காலத்தில் செலுத்தும் நிலை ஏற்படும். #ChennaiPropertyTax #TNAssembly

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com