சிறு குறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன்- மத்திய கூட்டுறவு வங்கி அறிவிப்பு

சிறு குறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.
நகைக்கடன்
நகைக்கடன்
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் பயன் பெறும் வகையில் குறுகிய கால விவசாயக் கடன்கள் மற்றும் விவசாயம், விவசாயமற்ற மத்திய காலக்கடன்கள், பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நகைக்கடன்கள் குறைந்த வட்டியின் கீழ் வழங்கப்படுகிறது.

மேலும் சிறு வணிகம் புரிவோர், சிறு வியாபாரிகளுக்கு சிறு வணிகக்கடன், மகளிருக்கு மகளிர் தொழில் முனைவோர் கடன், மாத வருமானம் பெறும் மகளிருக்கு கடனுதவி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வசதி மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் வசதி, நெசவுத்தொழில் புரியும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வசதி, அரசு ஊழியர்கள் மற்றும் மாத சம்பளம் பெறுவோருக்கான சம்பளக் கடன் வசதி அத்துடன் புதிய வீடு கட்டுதல், அடமானக்கடன் போன்றவைகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தொழில் புரிவோர்களுக்காக நகைக் காசுக்கடன் மற்றும் சிறுகுறு தொழில் முனைவோர் கடன் வசதி, கிளைகள் வழியாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவைகளுக்கு முதலீட்டுக் கடன் போன்ற கடன் வசதிகள் உள்ளது. மேலும் பெரு வணிகம் மற்றும் சிறு வணிகர்களுக்கான வியாபாரக் காசுக் கடன் குறைந்த வட்டியில் ரூ.50.00 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

அத்துடன், இவ்வங்கியானது 22.4.2020 முதல் தலைமை அலுவலகம் மற்றும் 35 கிளைகள் மூலம் கொரோனா வைரஸ் தடைக்காலத்தை கவனத்தில் கொண்டு அல்லல்படும் ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் குறுகிய காலத் திட்டமாக கோவிட்-19 சிறப்பு நகைக்கடன் திட்டம், ரூ.100-க்கு மாதம் ஒன்றுக்கு 0.64 பைசா என்ற மிக மிக குறைவான வட்டியில் ரூ.1 லட்சம் பெறத்தக்க வகையில் ஒரு ஆண்டு தவணையில் திருப்பி செலுத்தும் விதத்தில் புதிய நகைக்கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வங்கியானது அரசுடமையாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக வங்கிகள் போல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி., ஏ.டி.எம்., எஸ்.எம்.எஸ். போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்ளுக்கான பாதுகாப்பு வசதிகளும் உள்ளது.

எனவே விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இட்டுவைப்பு செய்தும், வங்கி மூலம் வழங்கப்பட்டும் கடன்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com