

புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் செயல்பட்டு வருகிற பரோசா அறக்கட்டளையை சேர்ந்தவர், ஆரிப் ஜப்பார்.
2001-ம் ஆண்டு, இவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் (இயற்கைக்கு மாறான பாலுறவு) வழக்குப்பதிவு செய்து, ஆரிப் ஜப்பாரை போலீசார் கைது செய்தனர். இவர் 49 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இவர் ஒரு வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் இவர், “வயது வந்த 2 பேர், ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதை தடை செய்வது என்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல்” என கூறி உள்ளார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இதே பிரச்சினையில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் ஜூலை மாதம் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. #Gaymarriage #tamilnews