மாநில உரிமைகளை பறித்து தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

மாநில உரிமைகளை பறித்து தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

மாநில உரிமைகளை பறித்து தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுகிறது.

மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது. மொழி, நிதி உரிமைகள், சுகாதாரம், சட்டம், ஒழுங்கு, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்து அதிகாரத்தினை மத்தியில் குவித்து வருகிறது.

இந்த நிலையில் மாநில உரிமைகளை மீட்கவும் மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தவும் வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

குறிப்பாக 1960-களில் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க. ஆகியவை பெரும் போராட்டங்களை நடத்தியது. தமிழக மாணவர்களும் இந்த போராட்டங்களில் பங்கேற்று பலியானார்கள். ஆனாலும் இன்னும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழை ஆட்சி மொழியாக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று மதுரையில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்படி மொழி உரிமையை பறிப்பதோடு கல்வி உரிமையையும் பறித்து வருகின்றனர். நீட் தேர்வு அதற்கு ஒரு சான்றாக உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில அரசுக்கான வரி விதிப்பு முறையை பறித்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி மாநிலங்களில் உள்ள சட்டம்-ஒழுங்கு அதிகாரத்தையும் பறித்து கொண்டனர்.

ஏற்கனவே சி.பி.ஐ., வருமான வரிதுறை, அமலாக்கத்துறை போன்றவற்றால் மாநில அரசுகளை அச்சுறுத்தி வருகின்றன. இது போல மாநில அரசுகளின் உரிமைகளை எல்லாம் பறித்து ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலையை உருவாக்க இன்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

எனவே மீண்டும் மாற்று சுயாட்சி கோரிக்கையை உயர்த்தி பிடிக்கும் வகையில் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம்.

தி.மு.க., தி.க., இடது சாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளையும் மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் பாலசிங்கம், எஸ்.எஸ்.பாலாஜி, சேகுவாரா, கவுதம் சன்னா உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com