பா.ஜனதா கட்சியின் ஊதுகுழல் ரஜினிகாந்த்: பாலகிருஷ்ணன் கண்டனம்

தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பா.ஜனதா கட்சியின் ஊதுகுழல் ரஜினிகாந்த்: பாலகிருஷ்ணன் கண்டனம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்த் அங்கு பேசும் போது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

போராட்டக் காரர்களால் தான் பிரச்சினை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று கேட்கிறார்.

ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சை படுத்திருக்கிறார். காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என்று அவர் சொல்கிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக பேசும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடுவது தவறு என்கிறாரா? பெட்ரோல், டீசல் விலைக்கு போராட வேண்டாம் என்கிறாரா?

சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி வாய்திறக்க வில்லை. காவல் துறையின் தவறை மூடி மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் உண்மைக்கு மாறான தகவல்களை தருவதை கைவிட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com