விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி 14 நாட்கள் காத்திருப்பு போராட்டம்- அய்யாக்கண்ணு

விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 14 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
Published on

திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் மனு அளித்தனர். அதன்பின் வெளியே வந்த அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க கோரியும், அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு நகைகள் ஏலம், ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி முதல் 14 நாட்கள் தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. 

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முயன்ற போது சென்னையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் திருச்சியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கலெக்டர் அலுவலகம் முன்பு இல்லாவிட்டாலும் கரூர் பை-பாஸ் ரோட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும். போலீசார் அனுமதி மறுத்தால் சென்னையில் முதல்-அமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com