ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறி அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்- எவ வேலு குற்றச்சாட்டு

ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறி அ.தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருவதாக கள்ளக்குறிச்சியில் நடந்த வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
எ.வ.வேலு எம்.எல்.ஏ.பேசிய போது எடுத்த படம். அருகில் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.உள்ளார்.
எ.வ.வேலு எம்.எல்.ஏ.பேசிய போது எடுத்த படம். அருகில் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.உள்ளார்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செல்வநாயகம், பொறுப்புக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மொழிப்போர் தியாகி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க.வினர் தமிழ் மொழிக்காக உயிரையும், குடும்பத்தையும் இழந்துள்ளனர். எனவே தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு. ஆனால் மொழிக்காக எதையும் செய்யாமல் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒரே நாடு, ஒரே தேசம் என்ற திட்டத்தில் ரேஷன் கடையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. நீட் தேர்வை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் தர வேண்டிய கரும்பு பாக்கித்தொகையை பெற்றுத்தர இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்களையும், உழவர்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற மு.க.ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே முடியும். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதிக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அமிர்தவள்ளிகோவிந்தராஜ், லியாகத்அலி, சண்முகம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், பெருமாள், முனியன், கனகராஜ், நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய்ஆனந்து, இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, வழக்கறிஞரணி அமைப்பாளர் ரஞ்சித், இலக்கிய அணி பழனியப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com