லாபஸ்சாக்னே, வார்னர் அபார சதம் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவிப்பு

பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபஸ் சாக்னே ஆகியோர் சதமடித்து அசத்த, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் எடுத்துள்ளது.
சதமடித்த மகிழ்ச்சியில் மார்னஸ் லாபஸ்சாக்னே
சதமடித்த மகிழ்ச்சியில் மார்னஸ் லாபஸ்சாக்னே
Published on

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார்.

கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆனதுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள்.

ஜோ பேர்ன்ஸ் சதம் அடிப்பார் என்ற நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது. அடுத்து டேவிட் வார்னருடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.

நேற்றைய ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 151 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய வார்னர் 154 ரன்னில் வெளியேறினார். ஆனால் அவரது அதிரடியை லாபஸ்சாக்னே தொடர்ந்தார்.

அவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், லாபஸ்சாக்னே 185 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 340 ரன்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் யாசிஎ ஷா 4 விக்கெட்டும், ஷஹின் அப்ரிதி, ஹரிஸ் சோஹாலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அசார் அலி 5 ரன்னிலும், ஹாரிஸ் சோஹாலி 8 ரன்னிலும், அசாத் ஷபிக் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 276 ரன்கள் பின்தங்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

இரண்டு நாள்கள் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com