

எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்து 47 வது ஆண்டு தொடங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலான ரத்தத்தின் ரத்தமே என்கிற பெயரிலான ஆப்பை தொடங்கி வைத்தனர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் உள்ளிட்ட பலருக்கு தக்க சமயத்திலான ரத்ததானம் என்பது உயிர்தானத்திற்கு ஈடானது.
ரத்தம் கிடைக்காமல் சமயங்களில் மரணங்களும் நேர்ந்துவிடுகின்றன. இந்த அவலங்களை தவிர்க்க அ.தி.மு.க. சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் இலவசமாக ரத்த தானம் பெறலாம்.
முதலில் இந்த ஆப்பில் குருதிக்கொடையளிக்க விரும்புபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தங்களது பெயர், ரத்தப்பிரிவு, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அவசரமாக ரத்ததானம் பெற விரும்புவோர், நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், முதலில் தங்களது பெயர், தேவைப்படும் ரத்தப்பிரிவு, முதலியவற்றை இதே ஆப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ரத்தம் தேவைப்படுபவர்கள், தங்கள் இருப்பிடம் அல்லது நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ரத்த கொடையாளிகளுடன் உடனடியாக தொலைபேசியில் பேசி, சூழலுக்கு ஏற்றாற்போல் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ரத்த கொடையை பெறமுடியும்.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளரான அஸ்பயர். கே சுவாமிநாதன் வடிவமைத்துள்ள இந்த ஆப், ரத்த தேவையை எதிர்நோக்கி உலகில் எந்த முலையில் யார் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அவருக்கு உயிர் கொடுத்து வாழ்வளிக்கும்.