நேபாள வெள்ளப் பேரழிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறிய நடிகர் சோனு சூட்!

வீடுகளையும் குடும்பங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தித் தருவதே தமது நோக்கம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Actor Sonu Sood
Published on

திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், சமூக சேவையில் நிஜ வாழ்வு நாயகனாகவும் திகழும் சோனு சூட், கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மக்களுக்கு உதவியுள்ளார். தனது சோனு சூட் அறக்கட்டளை சார்பாக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ள அவர், வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நேரில் களமிறங்கியுள்ளார்.

நேபாள நாட்டின் திரிசூலி பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றிப் பார்த்த சோனு சூட், அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தார். திரிசூலி ஆற்றின் கரையில் நின்று பேசிய அவர், இந்த வெள்ளப்பெருக்கு கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பையும், உடைந்த வீடுகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் விட்டுச் சென்றுள்ளதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

"நேபாள மக்கள் தனித்து இல்லை"

நிவாரணப் பணிகளின் போது ஊடகங்களிடம் பேசிய சோனு சூட், நேபாள நாட்டு மக்கள் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களை தனிமையாக உணர வேண்டாம் என்றும், உணவு, தங்குமிடம் மற்றும் மீண்டும் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தாம் உறுதியேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். வீடுகளையும் குடும்பங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தித் தருவதே தமது நோக்கம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

காத்மாண்டுவிற்குச் சென்று நிவாரணப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்து வரும் சோனு சூட்டுடன் சேர்ந்து நடிகை மனிஷா கொய்ராலா, அருண் கோவில் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேபாள மக்களுக்குத் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர். தற்போதைய தகவல்களின்படி வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையின் கரமாகச் செயல்படும் சோனு சூட்டின் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com