

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படம் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-
சட்டமன்றத்திலும் கட்டாகுஸ்தி தான் நடக்குது. ஆரோக்கியமான சண்டைதான். மக்களுக்கு யார் நல்லது செய்றது என்ற ஆரோக்கியமான போட்டிதான்.
கூட்டம் முடிந்ததும் கைகுலுக்கிவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விடுவோம். சினிமாவுக்கு இப்போது ஒரு போட்டி வந்துள்ளது. மக்கள், எப்படா மாண்புமிகு பேரவை தலைவரே என முதலமைச்சர் விஜய் கூறுவார் என்று டிவியை பார்க்க தொடங்கிவிட்டனர்.
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு உண்மையான சினிமா காதலர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார்.
‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு 5 நாட்கள், ஏன் ஒரு நாளில் 5 காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்.
இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை.
ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
நம் தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.