

தமிழ்நாட்டு மக்கள் விஜய் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. தியேட்டரில் அதிகம் வசூலிக்கும் நடிகர் என்பதற்காக மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். சட்டசபையின் சில வீடியோ காட்சிகளை நான் பார்த்துள்ளேன். முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் என நடிகர் நானி பேசினார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வருகிற 24-ந்தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘தி பாரடைஸ்’. படத்தில் கதாநாயகியாக கயாடு லோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் நானி பேசியதாவது:-
‘தி பாரடைஸ்’ படம் நான் மிகவும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகமாக உழைத்த படம். எனவே உங்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது. தமிழ் சினிமா எனக்கு ஒரு பைபிள் போன்றது. கமல், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளை பார்த்தே சினிமாவை அணுகும் விதத்தை கற்றுக் கொண்டேன்.
சென்னைக்கு வரும்போது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சென்னையில் எனக்கும் ஏதோ ஒரு முந்தைய பிறவி தொடர்பு இருப்பது போன்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.
விஜய் முதலமைச்சராக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு மக்கள் அளிக்கும் அன்பு அப்படிப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. தியேட்டரில் அதிகம் வசூலிக்கும் நடிகர் என்பதற்காக மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். சட்டசபையின் சில வீடியோ காட்சிகளை நான் பார்த்துள்ளேன். முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் என்றார்.