கோப்பு படம் 
தொழில்நுட்பம்

இந்தியாவின் அதிவேக 4ஜி கிடைக்கும் நகரம்

இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சிக்னல் கிடைக்கும் நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் தொழில்நுட்ப நகரங்கள் அதிர்ச்சியளிக்கும் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா சிக்னல் கிடைக்கும் நகரமாக பாட்னா இருக்கிறது. நாட்டின் மிக முக்கிய தொழில்நுட்ப நகரங்களாக அறியப்படும் பெங்களூரு மற்றும் ஐதராபாத் இந்த பட்டியலில் பின்தங்கியுள்ளன.

ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் பாட்னாவில் 4ஜி சிக்னல் அளவு 92.6% ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு 88.3% அளவு சிக்னல் வழங்கி பத்தாவது இடம் பிடித்துள்ளது. 4ஜி சிக்னல் பரப்பளவு இந்திய நகரங்களிடையே குறுகி வருவது இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 20 நகரங்களும் 4ஜி சிக்னல் அளவினை 80%-க்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன. பாட்னாவை தொடர்ந்து கான்பூர், அலகாபாத், கொல்கத்தா, போபால் மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 4ஜி டேட்டா சிக்னல் அளவுகளில் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த நகரங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

வரும் மாதங்களில் மற்ற நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு அதிகரிக்கும் என ஓபன்சிக்னல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இருபது நகரங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த பட்டியலில் சென்னை 16-வது இடம் பிடித்துள்ளது. சென்னையில் 4ஜி டேட்டா பரப்பளவு 85% - 90% ஆக இருக்கிறது.

முன்னதாக நவி மும்பை இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா அதாவது நொடிக்கு 8.72 எம்பி (8.72 Mpbs) வழங்கி முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் அதிவேக 4ஜி டேட்டா வேகம் நொடிக்கு 8.52 எம்பி (8.52Mpbs) ஆக இருக்கிறது.

உலகில் 4ஜி பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் மற்றும் இது மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பது தான் என கூறப்படுகிறது.