Google Earth AI Fake Images: Google suspends Nano Banana 2 tool over misinformation fears 
அறிந்து கொள்ளுங்கள்

போலி படங்கள் பரவல்: உடனடியாக நிறுத்தப்பட்ட கூகுள் எர்த் ஏ.ஐ. டூல்ஸ்

கூகுள் எர்த்தின் நானோ பனானா செயற்கைக்கோள் படங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.

கூகுள் எர்த்-இல் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், உலகம் எப்படி தோற்றமளிக்கிறது என்பதை மாற்றும் வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.

கூகுள் எர்த் நானோ பனானா 2

கூகுளின் நானோ பனானா 2 என்ற அம்சத்துடன் கூகுள் எர்த் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, செயற்கைக்கோள் படங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.

உலகைப் புதிய கோணத்தில் கற்பனை செய்வதற்கான ஒரு வழியாகவும், வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு புதிய முயற்சியாகவும் கூகுள் இதை முன்வைக்கிறது.

நானோ பனானா 2-ஐப் பயன்படுத்தி, ஒரே ஒரு கட்டளையின் மூலம் நீங்கள் கூறுகளைச் சேர்க்கலாம் என்றும் ஓர் இடத்தின் தோற்றத்தை மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக போலிப் படங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்பட்டு, இணையத் தளத்தில் பகிரப்பட்டால், அந்த படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

போலி புகைப்படங்கள்

இதுகுறித்து செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் ஹென்க் வான் கூறுகையில், "ஈரானில் ஒரு அணு உலையையும், காசாவில் குண்டு வெடிப்புக் குழியுடன் கூடிய ஒரு மருத்துவமனையையும் இந்த டூல்ஸ் கொண்டு உருவாக்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

யாராவது இதை உண்மையான படங்கள் என்று தவறாக நினைத்தால், இந்த இரண்டு காட்சிகளும் இணையத்தில் வைரலாகப் பரவக்கூடும்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் பெரிய அளவில் குவிந்திக்கும் படத்தையும் உருவாக்கியுள்ளார். இது போன்ற படங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்தார்.

கூகுள் எர்த் ஒரு இலவசமாக சேவையை வழங்குவதால், யார் வேண்டுமானாலும் ஒரே ஒரு கட்டளையின் மூலமே குழப்பத்தை உருவாக்க முடியும்.

உதாரணமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் சில படங்கள், 9/11 தாக்குதலைப் போலவே, நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஒரு விமானம் மோதி நொறுங்குவதைக் காட்சிபடுத்த முடியும்.

கூகுள் எர்த் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். இது உலகம் முழுவதிலுமுள்ள செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கவும், அவற்றை பழைய படங்களுடன் ஒப்பிடவும் உதவுகிறது.

உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இது காட்சிப்படுத்த முடியும்.

ஆனால், மக்கள் இணையத்தில் போலிக் காட்சிகளை, குறிப்பாக உணர்திறன் மிக்க இடங்களின் போலிக் காட்சிகளை, பரப்பத் தொடங்கினால், அது இணையத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். தவறான தகவல்கள் இணையத்தில் மிக விரைவாகப் பரவக்கூடும்.

கூகுள் நிறுவனம் விளக்கம்

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு கருதி அந்த சேவையை நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகின் நம்பகமான காட்சிக்காக மக்கள் கூகுள் எர்த்தை தனித்துவமாக நம்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். புவிசார் தொழில் வல்லுநர்கள் இந்த அம்சத்தை பல்வேறு பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இருப்பினும், எங்கள் கொள்கைகளை மீறுவதாகத் தோன்றும் உருவாக்கப்பட்ட படங்களின் ஸ்கிரீன்ஷாட்களை மக்கள் பகிர்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே, நாங்கள் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், கூகுள் எர்த்தில் உள்ள இந்த அம்சத்தை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்.

உருவாக்கப்பட்ட படங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக பிரதான கூகுள் எர்த் அனுபவத்தில் தோன்றவில்லை என்பதையும், அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று வாட்டர்மார்க் செய்யப்பட்டிருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

கூகுளின் மாடல்களில் இருந்து செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிய SynthID உதவினாலும், அது தவறுகளைச் செய்யக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில், கூகுள் எர்த்தில் நானோ பனானா வழியாக உருவாக்கப்பட்ட படங்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பது ஜெமினியால் கண்டறியப்படவில்ல என்று பயனாளர்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.