மத்திய அரசு ஒரு புதிய யு.பி.ஐ. (UPI) அம்சத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த அம்சம், பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும்.
இந்த வரவிருக்கும் அம்சம், தொலைதூர மற்றும் குறைந்த இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கும்.
ஆஃப்லைன் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை ஆதரிப்பதற்கு, வணிகர் விற்பனை முனைய (PoS) நிறுவனங்கள் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்திடம் (NPCI) இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை:
இந்தியாவில் விரைவில் இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ. பணம் செலுத்தும் வசதி வரலாம். இந்த விவகாரம் குறித்து அறிந்த மூன்று நபர்களை மேற்கோள் காட்டி , வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனிலோ அல்லது வணிகரின் PoS டெர்மினலிலோ இணைய இணைப்பு இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதியை இந்தியா விரைவில் செயல்படுத்தவுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக, இணக்கமான PoS டெர்மினல்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சான்றளிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஆஃப்லைன் யு.பி.ஐ.:
ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன், பயனர்கள் தங்களின் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கப்படும் கட்டண முனையங்களில் தட்டுவதன் மூலம் ஆஃப்லைன் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம்.
ஆரம்பத்தில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2,000 என ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் வரம்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம், சாதனத்தில் உள்ள யு.பி.ஐ. லைட் வாலட் மூலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் ஆரம்பத்தில், இணைய இணைப்பு இல்லாமலோ அல்லது யு.பி.ஐ. PIN எண்ணை உள்ளிடாமலோ, ஆதரிக்கப்படும் ஆஃப்லைன் PoS டெர்மினல்களில் பணம் செலுத்துவதற்கு, இணையத்துடன் இணைந்திருக்கும்போது வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டியிருக்கும். இந்தப் பரிவர்த்தனை யு.பி.ஐ. லைட் இருப்பைப் பயன்படுத்தும்.