இந்தியாவில் படித்து முடித்ததும் இளைஞர்கள் Fresher-களாக நுழையும் என்ட்ரி லெவல் வேலைகளில் சுமார் 37 சதவீத வேலைகளை ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கையாளத் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இது உலகளாவிய சராசரியான 33 சதவீதத்தை விட அதிகம்.
Cognizant மற்றும் Pearson நிறுவனங்கள் இணைந்து நடத்திய 'The AI Workforce Pulse' என்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 750 மனிதவள தலைவர்களான HR-களிடம் கருத்து கேட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 18 சதவீத HR-கள், தங்களது நிறுவனங்களில் Freshers செய்து வந்த வேலைகளில் பாதிக்கும் மேலான பணிகளை தற்போது ஏஐ சிஸ்டம்களே செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒரே மாதிரியான வேலைகளை ஏஐ ஏற்றுக்கொள்வதால், எதிர்காலத்தில் ஊழியர்கள் வெறும் வேலை செய்பவர்களாக இல்லாமல், ஏஐ சிஸ்டம்களை மேற்பார்வையிடுதல், ஏஐ உருவாக்கும் தரவுகளை சரிபார்த்தல் மற்றும் முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்ற பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.
அதேநேரம் ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை முழுமையாகபறித்துவிடவில்லை, மாறாக அவை வேலை செய்யும் முறையை மறுவடிவமைப்பு செய்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் என்ட்ரி லெவல் வேலைகள் முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டும் என்று 96 சதவீத HRகள் கணித்துள்ளனர்.
தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி மார்க்கெட்டிங், விற்பனை, சட்டம் போன்ற துறைகளிலும் ஏஐ அறிவு என்பது இனி இன்றியமையாத ஒன்றாக மாறும் என 98 சதவீத வல்லுநர்கள் கூறுகின்றனர்.