சுமார் ஒரு கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிம்பெரியம் தெரிவித்துள்ளது. இந்த மால்வேர் க்ரிப்ட்ஹார்ஸ் என அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய ஆண்ட்ராய்டு பயனர்களை பாதித்து இருக்கிறது.
மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த மால்வேர் பரவி இருக்கிறது. ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மால்வேர் பரப்பிய செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
க்ரிப்ட்ஹார்ஸ் மால்வேர் செயலிகளின் குறியீடுகளில் நுழைந்து பயனர்களை தீங்கு விளைவிக்கும் இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வைக்கும். இந்த இணைய முகவரிகள் பயனர் பணத்தை திருடி ஹேக்கர்களின் அக்கவுண்ட்களுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
இந்த மால்வேர் பயனர் அனுமதியின்றி பிரீமியம் சேவைகளுக்கு சந்தாதாரர் ஆக மாற்ற வைக்கிறது. மால்வேர் கொண்டு உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல கோடி பேரை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. பயனர்களை ஏமாற்ற உள்ளூர் மொழியிலும் மால்வேர் செயல்பட வைக்கப்பட்டுள்ளது.