சத்ய நாதெல்லா 
தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் தலைவர் ஆனார் சத்ய நாதெல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த ஜான் தாம்ப்சன் தற்போது இயக்குனராக பொறுப்பேற்று இருக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்று இருக்கிறார். தலைவராக இருந்துவந்த ஜான் தாம்ப்சன் மூத்த இயக்குனராக பதவி ஏற்கிறார்.

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.

தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார். 

பதவி உயர்வு மட்டுமன்றி, மைக்ரோசாப்ட் தலைவராக பொறுப்பேற்கும் மூன்றாவது நபர் என்ற பெருமையை சத்ய நாதெல்லா பெற்று இருக்கிறார். முன்னதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஜான் தாம்ப்சன் மட்டுமே இந்நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளனர். 

கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதை தொடர்ந்து முதல் முறையாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பணி மாற்றம் நடைபெற்று இருக்கிறது. நிர்வாக குழுவில் இருந்து விலகிய பில் கேட்ஸ் தொண்டு பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.