தொழில்நுட்பம்

ஜனவரியில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா முழுக்க வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக இருக்கிறது.

டிசம்பர் 2018 வரை வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.6 கோடியில் இருந்து ஜனவரி 2019 இல் 118.19 கோடியாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 0.51 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக டிராய் தெரிவித்திருக்கிறது.

மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 102.25 கோடி பேர் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதாக டிராய் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரியில் 9.83 லட்சம் புதிய இணைப்புகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.53 கோடியாக அதிகரித்துள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.03 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜனவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவன சேவையை 41.52 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.