தொழில்நுட்பம்

அதிவேக இணைய வசதியை வழங்க டிரோன் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருக்கும் பகுதிகளில் இணைய வேகத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக் சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் ஹை-டென்சிட்டி சாலிட் ஸ்டேட் டிரைவ்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் டிரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. கேடலினா என்ற குறியீட்டு பெயரில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இது ஒரு ஆண்டுக்கு முன்பே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

2017 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சிறிய டிரோன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு செல்லுலார் சேவைகளில் கவனம் செலுத்தியதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2017 இல் நடைபெற்ற ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட்டு பின் சில மாதங்களிலேயே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ஆபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர்களில் தொலைதொடர்பு சாதனங்களை வைத்து வானில் சில நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து இணைய வசதியை வழங்க ஃபேஸ்புக் திட்டமிட்டிருந்தது. 2018 ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் அக்யுலா டிரோன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

அக்யுலா திட்டத்தின் நோக்கம் உலக மக்களுக்கு இணைய வசதியை அறிமுகம் செய்து அவர்களுக்கு அனைத்து வித வாய்ப்புகளை வழங்குவது தான் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். இதற்கென ஃபேஸ்புக் ஹை ஆல்டி-டியூட் பிளாட்ஃபார்ம் ஸ்டேஷன் சிஸ்டத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.

SCROLL FOR NEXT