பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் சென்றார். அப்போது வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் பிரதமரின் வாகனம் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது.
இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த சம்பவத்திற்கு காரணம் என பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வாகனம் உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தது என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் 2017 ஆண்டு பிரதமரின் வாகனம் நொய்டாவில் இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த இரு காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிரதமர் மோடியின் வாகனம் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.