சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 1975-ம் ஆண்டு உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது.
கடைசியாக 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையை (50 ஓவர்) ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
14-வது ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை அடுத்த ஆண்டு (2027) அக்டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 21-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.
உலக கோப்பை போட்டி நடைபெறும் 12 இடங்களை ஐ.சி.சி. சமீபத்தில் அறிவித்து இருந்தது.
இந்த போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் நேரடியாக விளையாடும். செப்டம்பர் 30-ந்தேதி தர வரிசையின் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் உலக கோப்பையில் விளையாடும். எஞ்சிய 4 இடங்களுக்கு தகுதி சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான தகுதிசுற்று நடைபெறும் தேதி விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 22-ந்தேதி முதல் மார்ச் 23-ந்தேதி வரை தகுதிசுற்று ஆட்டங்கள் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் போட்டி நடைபெறும் இடங்களை முடிவு செய்யவில்லை.
தகுதி சுற்றில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.