விளையாட்டு

பாராட்டு விழாவில் மயங்கி விழுந்த வினேஷ் போகத்

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது.மேளதாளத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Maalaimalar

புதுடெல்லி:

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி யில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டி வரை நுழைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது பதக்கம் பறிபோனது. இதை தொடர்ந்து வினேஷ் போகத் அதிர்ச்சி அடைந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மன வேதனையுடன் வினேஷ் போகத் நேற்று முன்தினம் நாடு திரும்பி னார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பதக்கத்தை பெற முடியா விட்டாலும் நாடு முழுவதும் அனைவரது மனங்களையும் வென்ற வினேஷ் போகத்துக்கு மேளதாளத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் அவர் காரில் அவரது சொந்த ஊரான அரியானா மாநிலம் பலாலி கிராமத்துக்கு சென்றார். மக்கள் வழிநெடுகிலும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து இருந்தனர்.

அதன் பிறகு நடந்த பாராட்டு விழாவின்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் காட் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் வழங்கினார்கள்.

பாராட்டு விழாவின் போது உடல்நிலை சரியில்லாமல் வினேஷ் போகத் மயங்கி விழுந்தார். அவர் 20 மணி நேரத்துக்கும் அதிமாக தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் மிகவும் களைப்படைந்து சோர்வுடன் காணப்பட்டார். இதன் காரணமாகவே மயக்கமானார்.

வினேஷ் போகத் நாற்காலியில் மயங்கி கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.