ஐபிஎல் 2026 தொடர் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 30வது லீக் போட்டி குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத முதல் அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது.
இந்த சீசனில் பஞ்சாப் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றியும், 1 போட்டி மழையினால் முடிவில்லாமலும் அமைந்ததால், ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் உடனான முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், சிஎஸ்கே உடனான 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், எஸ்ஆர்ஹெச் உடனான 4வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பை உடனான 5வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்றைய லக்னோவிற்கு எதிரான 6வது போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்திலும் தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளது.
கொல்கத்தா அணியுடனான மூன்றாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன் 2014-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் 2015-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 5 போட்டிகளில் வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் இறங்கியுள்ள பஞ்சாப் அணி, இந்த சீசனில் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.