ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா' நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திருமணத்தின் அதிகாரப்பூர்வ தேதியும், அது நடைபெறும் இடமும் தற்போது வெளியாகியுள்ளது.
ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா' நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இரு குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண விழாவில், முக்கிய கிரிக்கெட் வீரர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி லக்னோவில் உள்ள 'தி சென்ட்ரம்' ஹோட்டலில் இருவருக்கும் மிகவும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோஷியல் மீடியா வாயிலாக அறிமுகமாகி காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், தற்போது இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளனர்.
ரிங்கு சிங் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய 'பினிஷராக' திகழ்ந்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மசாலிஷஹர் தொகுதி எம்பியான பிரியா சரோஜ், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்பிக்களில் ஒருவராகச் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர். இவர் முன்னாள் எம்பி தூபானி சரோஜின் மகளாவார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவீட்டாரும் இணைந்து திருமணத் தேதியை இறுதி செய்துள்ளதை அடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் இத்தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.