விளையாட்டு

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டனாக ரஹமத் ஷா நியமனம்

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஹமத் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் அணி கேப்டனாக கடந்த 2022-ம் ஆண்டு பொறுப்பேற்ற ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

அவரது தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. மேலும், 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தினார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக ஷாஹிடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளேன் என ஷாஹிடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக ரஹமத் ஷாவை நியமனம் செய்துள்ளது.

ரஹமத் ஷா கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.