விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி பேச்சு

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது.இதில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

புதுடெல்லி:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். தடகளத்தில் பிரீத்தி பால் ஒரு வெண்கலம் வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.

இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று உரையாடினார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார். தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவனி லெகரா இந்த உரையாடலில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT